Play and watch event

31வது இலக்கியச்சந்திப்பு

31 வது இலக்கியச்சந்திப்பு.

புலம்பெயர் இலக்கிய ஆர்வலர்களினால் 1988 செப்ட்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச்சந்திப்பின் 31வது தொடர் 2004 நவம்பர் மாதம் 6-7 திகதிகளில் Berger Church Hall Karl-Schurz-Str. 39, 70190 Stuttgart, Germany இல்; நடைபெற்றது. வழக்கம் பொல ஜேர்மனி, பிரான்ஸ், ஹொலன்ட், நோர்வே, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

31 வது இலக்கியச்சந்திப்பில் பின்வரும் விடயங்கள் பற்றி உரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

புலம்பெயர்நாடுகளில் தமிழ் அகதிகள் மீதான புதிய நெருக்கடிகள் (யோகநாதன் புத்ரா - ஸ்ருட்கார்ட்.ஜெர்மனி), தமிழ் ஊடகங்களும் அவை மீதான ஜனநாயகவிரோதப்போக்குகளும் (பரராஜசிங்கம் - பெர்லின். ஜெர்மனி) ; நூல்; அறிமுகம் , இலங்கை அரசியல் சமகால நிலவரம் (விஸ்வலிங்கம் சிவலிங்கம் லண்டன்), தமிழ்த்தேசியவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கும் அதன் தாக்கங்களும் (பத்மபிரபா சுவிஸ்), உலகமயமாக்கலும் மூன்றாம் உலக நாடுகள் மீதான அதன் தாக்கமும் (அழகலிங்கம் கெரன்பேர்க், ஜெர்மனி) ஈ-புக் -ஒரு அறிமுகம். (கிரிதரன் - ஸ்ருட்காட்)

நூல் அறிமுகத்தின் போது சி.புஷ்பராஜா எழுதிய 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்", ஷோபாசக்தி எழுதிய 'ம்", மற்றும் பெண்கள் சந்திப்பு மலர் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

சந்திப்பு முடிவில் ஊடகங்களுக்கெதிரான ஜனநாயகவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

அடுத்த இலக்கியச்சந்திப்பு நோர்வேயில் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டது.

06.-07.11.04 ஆகிய தினங்களில் ஸ்ருட்கார்ட் நகரில் இடம்பெற்ற 31வது இலக்கியச் சந்திப்பின்போது கலந்து கொண்ட இலக்கிய ஆர்வலர்களினால் ஊடகங்களுக்கு அளிக்கப்படும் அறிக்கை

தமிழ்பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான சமாதானச் சூழல் திரண்டு வரும் இவ்வேளையில் இப்பேச்சுவார்த்தைகள் தொடர்பான சாதக, பாதக அம்சங்களை வெளிக்கொணரும் பணி ஊடகங்களைச் சார்ந்தது. கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடும் அடிப்படை உரிமைகளை இவ் ஊடகங்கள் கொண்டுள்ளன.

இந்த அடிப்படை உரிமைகளின் தார்ப்பரியத்தைக் கவனத்திற் கொண்டு இவ் ஊடகங்கள் சமூகப் பொறுப்புடனும், நேர்மையுடனும் இயங்க வேண்டும். ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் சுதந்திரமான, ஜனநாயகப+ர்வமான செயற்பாட்டை வலியுறுத்தும் அதேவேளை இவ் ஊடகங்கள் தமக்குரிய சுதந்திரத்தைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான வகையில் தனிமனித குரோதங்களையும், வன்முறைச் சொல்லாடல்களையும் மறைமுகமாகப் பயன்படுத்துவதோடு அவற்றை உற்சாகப்படுத்துபவனவாகவும் அமைந்து வருவது கவலைக்குரிய அம்சமாகும்.

மாற்றுக்கருத்துடையோர் மீது திட்டமிட்டு நடத்தப்படும் மனிதப்படுகொலைகளை இவ் ஊடகங்கள் உதாசீனப்படுத்தி இதற்குக் காரணமான வன்முறைச் சக்திகளை நியாயப்படுத்தியும், வன்முறைக்குள்ளானவர்கள் மீது கொச்சைத்தனமான புனைவுகளை உருவகப்படுத்தியும் செயற்படும் செயற்பாடானது ஊடகங்களின் நம்பகத்தன்மை மீது கேள்வியை எழுப்புகிறது.

எனவே ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளும், ஊடகங்களால் தூண்டப்படும் வன்முறைப் பிரச்சாரங்களும் சமாதானத்திற்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் பாதகமானது என்பதால் இப்போக்கை இலக்கியச் சந்திப்பு வன்மையாகக்; கண்டிக்கிறது.

இவ்வாறான சமூக விரோதப்போக்குகள் தமிழ்பேசும் மக்களின் ஒட்டு மொத்த ஜனநாயக விழுமியங்களையும் சமூக மாற்றத்தையும் பாதிக்கும் என்பதனையும் இத்தருணத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

நன்றி

இலக்கியச்சந்திப்பு
ஸ்ருட்கார்ட்
07.11.2004
(இலக்கியச் சந்திப்பு இணையத்தளத்திலிருந்து பிரதியெடுக்கப்பட்டது.)

0 comments:

கருத்துரையிடுக