Play and watch event

25வது இலக்கியச்சந்திப்பு

25வது இலக்கியச் சந்திப்பு பேர்லின் நகரில் 22-23 ஆம் திகதிகளில் நடைபெற்றது. 1988 இல் ஆரம்பித்து பத்து ஆண்டுகளைப் பூர்த்திசெய்திருக்கும் இச்சந்திப்பு சாதித்தது என்ன? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுவதுண்டு. பத்து ஆண்டுகள் இலக்கிய விமர்சனத்துக்காக, சகல விதமான மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதற்காக, எல்லாவிதமான கருத்துக்களையும் பேசவும் விவாதிக்கவும் கூடிய ஒரு களமாக அது தொடர்ந்தும் இருந்து வருவது ஒரு சாதனையாகும்.
ஐந்து ஆண்டுகளிற்கு முன்பு பரீசில் அராஜகவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட திரு.சபாலிங்கம் அவர்கள் நினைவாக "தோற்றுத்தான் போவோமா" என்ற மலர் வெளியீட்டுடன் சந்திப்பு ஆரம்பமாகியது.
திரு. சபாலிங்கத்தின் படுகொலையை நினைவு கூருவதும் அதற்கான மலரை வெளியிடுவதும் - சகல அராகவாதிகளுக்கும், அராகநடவடிக்கைகளுக்குமெதிராக எதிர்ப்புக் குரல் கொடுக்கும் நடவடிக்கையாகும். இந்தமலரைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் திரு.புஸ்பராஜா அவர்களின் சேவை பாராட்டத்தக்கது. பல புலம்பெயர் எழுத்தாளர்களின் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.
("தோற்றுத்தான் போவோமா " திரு .சபாலிங்கம் நினைவு மலரைப் பெற விரும்புவோர் s.pushparajah, 7,Rue Racine 95140 Garges Les Gonesse, FRANCE) என்ற விலாசத்துடன் தொடர்பு கொள்ளவும். புலம்பெயர் சஞ்சிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள் மீதான விமர்சன விவாதங்களையடுத்து-
இலங்கை முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைவரலாறு என்ற விடயம் பற்றி எம் .ஆர்.ஸ்டாலின் உரையாற்றினார், ஆழமான ஆய்வு செய்து செய்யப்பட்ட இவ்வுரை மிகப் பயனுள்ள பல தகவல்களைத் தந்தது. யாழ்ப்பாண வைபவமாலையிலிருந்து, தற்கால ஆவணங்கள் வரை சான்றுகள் காட்டி இலங்கை முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையை அவர் விபரித்தார்.

பின்நவீனத்துவம் என்றால் என்ன, அதன் வரலாறு, அதன் இன்றைய போக்குகள் என்பவை பற்றி வின்சன்ட் போல் பேசினார். இவரைத் தொடர்ந்து பின்நவீனத்துவமும் அதன் அரசியலும் என்ற விடயம் பற்றி அசோக் பேசினார். இவ்விரு விடயங்களும் நீண்ட நேர காரசாரமான விவாதங்களை உருவாக்கின, மார்க்சியம், பின்நவீனத்துவம் பற்றிய பல்வேறுபட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் புதிய புத்தகங்களின் அறிமுகத்துடன் ஆரம்பமாகியது.
அ.முத்துலிங்கத்தின் -வடக்கவீதி,
ந.கண்ணனின் உதிர்இலைக்காலம்
,
கலாமோகனின் நிஸ்ட்டை
ஆகிய சிறுகதைத் தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டன.
The Trap Of English as universal Medium in Colonial and Postcolonial Discourse On India ( A historical review Of Language attitudes towards English in India)
என்ற விடயம் பற்றி அசலி குப்தா உரையாற்றினார், ஆங்கிலம் பற்றின மாயை அகற்றப்பட வேண்டும், சுதேசிய மொழிகளுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனத் தமது உரையில் வலியுறத்தினார்.
இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் விஞ்ஞானம் , கலை, சித்தரம், புகைப்படக்கலை இன்னும் பல - பற்றிய முன்மொழிவுகளை மணிசுப்பராயன் முன்வைத்தார்.
இத் தொடரில் விண்வெளி சம்பந்தமான விவரணப் படமும் அது சம்பந்தமான உரையும் மணிசுப்பராயனினால் நிகழ்த்தப்பட்டது.
இறுதியாகக் கனடாவில் நடாத்தப்பட்ட இன்டர் நெட்டில் தமிழ் என்ற நிகழ்ச்சி எல்லோரையும் கவர்ந்தது. வீட்டிற்குள் உலகத்தைக் கொண்டுவரும் இணையம் - இன்டர்நெற்-பற்றி இலகு தமிழில் விளக்கங்களை அவர் கொடுத்தார்.
இசை நிகழ்வுடன் 25வது இலக்கியச் சந்திப்பு நிறைவு பெற்றது.

அடுத்த 26வது இலக்கியச் சந்திப்பை இலண்டனில் நடத்துவதெனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

8.6.1999

0 comments:

கருத்துரையிடுக